

அகமதாபாத்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஆன்லைன் ஜோதிட மோசடி கும்பல் சமூக ஊடகங்களில் அஸ்ட்ராலஜர் பூஜா கின்னார்மா மற்றும் ஆச்சார்யா விகாஸ் சாஸ்திரி போன்ற பெயர்களில் போலி கணக்குகளை உருவாக்கியுள்ளது.
ஜோதிடர்கள் மற்றும் ஆன்மிக குருக்கள் போல் நடித்த இவர்கள், காதல், திருமணம், குடும்பம், தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பவர்களாக செயல்பட்டுள்ளனர்.
குஜராத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த அப்பாவி மக்கள் பலர், காதல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இவர்களின் வலையில் சிக்கியுள்ளனர். இந்த கும்பல் பூஜை, சடங்குகள் செய்ய வேண்டும் எனக் கூறி அப்பாவி மக்களிடம் டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் கட்டணம் வசூலித்துள்ளனர்.
பூஜை, சடங்குகள் செய்யும்போது, அரை நிர்வாண கோலத்தில் இருக்க வேண்டும் எனக் கூறி அதை புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் புகைப்படங்கள், வீடியோக்களை மார்பிங் செய்து, பொதுவெளியில் விடுவதாக கூறி இந்த கும்பல் தங்களிடம் சிக்கிய அப்பாவி கும்பலை மிரட்டி பணம் பறித்து உள்ளது.
இது தொடர்பான புகாரின் பேரில் அகமதாபாத் சைபர் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு மோசடி கும்பலை பிடித்தனர். அவர்கள் அப்பாவி மக்களை ஏமாற்றி ரூ.60 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.