

சண்டிகர்: பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசு கடந்த 2025 மார்ச் மாதம் ‘யுத் நஷியான் விருத்’ (போதைக்கு எதிரான போர்) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது. இதன் கீழ், போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் (என்டிபிஎஸ்) பிரிவு 64 A-ன் படி, இதுவரை 10,656 பேருக்குத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மார்ச் 1 முதல் 2026 ஜூலை 6 வரை பஞ்சாப் போலீஸார் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 51,516 வழக்குகளைப் பதிவு செய்து, 67,519 பேரைக் கைது செய்துள்ளனர். இதே காலகட்டத்தில், 10,000-க்கும் மேற்பட்டோருக்குத் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது போதைப் பொருள் விநியோகத்தைத் தடுப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ வசதிகளுடன் இணைக்கும் போலீஸாரின் இரட்டை அணுகு முறையைப் பிரதிபலிக்கிறது. குறைந்த அளவில் போதைப் பொருள் வைத்திருந்ததற்காக இவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக, அரசு மறுவாழ்வு மையங்களில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பஞ்சாப் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) கவுரவ் யாதவ் கூறுகையில், “போதைக்கு எதிரான போராட்டம் என்பது போதைப் பொருள் கடத்தல் காரர்களைக் கைது செய்வது மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர வாய்ப்பளிப்பதும் ஆகும்” என்றார்.