

கொல்கத்தா: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மேற்கு வங்க பாஜக தலைமையகத்தில் அவருடைய மெழுகு சிலை நேற்று திறக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று 76-வது பிறந்த நாள். மேலும் குஜராத் முதல்வர், பிரதமர் என அரசு பதவியில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் நேற்று பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமையகத்தில், பிரதமர் மோடியின் மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.
இந்த சிலையை உருவாக்கிய ஸ்தபதி சுஷாந்தா ராய் கூறும்போது, “பிரதமர் மோடியின் மெழுகுச் சிலையை உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. இந்தச் சிலை மெழுகு மற்றும் இரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. 5.7 அடி உயரம் கொண்டது. இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தர பெங்காலி வேட்டி மற்றும் குர்தா அணிவித்துள்ளேன். இந்த சிலையை உருவாக்க 2 மாதங்கள் ஆனது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றபோது, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது அவர் சென்றிருந்த தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தச் சிலையை உருவாக்கியுள்ளேன்" என்றார்.