

பாட்னா: பிஹார் மாநிலம் பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற்று தனது தேர்தல் கணக்கைத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மொத்தம் ரூ.198 கோடி மதிப்பிலான சொத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஜூலை 30-ம் தேதி நடைபெற்ற இடைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்களின்படி, பிரசாந்த் கிஷோர், அவரது மனைவி ஜான்னவி தாஸ் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள ஒருவரின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.198.07 கோடியாகும்.
இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.111.78 கோடி என்றும், அசையாச் சொத்துகளின் மதிப்பு ரூ.86.29 கோடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல், பிரசாந்த் கிஷோரின் சொத்துகளில் பெரும்பகுதி நிதி சார்ந்த பத்திரங்கள் மற்றும் முதலீடு களிலேயே உள்ளது. வங்கி வைப்புத் தொகை, பங்கு, பரஸ்பர நிதி, பத்திரங்கள், ஆபரணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை அசையும் சொத்துகளில் அடங்கும்.