

புதுடெல்லி: பாஜகவின் 47-வது நிறுவன நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், எதிலும் இந்தியாவுக்கே முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையில் பாஜக தொடர்ந்து இயங்கி வருவதாக அவர் பெருமிதத்துடன் கூறினார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பாஜக எப்போதும் தேச நலனுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது. சமூக சேவை செய்வதிலும், நாட்டை முன்னேற்றுவதிலும் எமது கட்சி முன்னணியில் நிற்கிறது. அடிமட்ட அளவில் தன்னலமற்ற சேவையைத் தொடர்ந்து வழங்கி வரும் லட்சக் கணக்கான தொண்டர்களின் உழைப்பால் கட்சியின் சித்தாந்தம் கடைக்கோடி மக்களையும் சென்றடைந்துள்ளது.
கடந்த பல தசாப்தங்களாகக் கட்சியின் வளர்ச்சிக்காகத் தியாகம் செய்த எண்ணற்ற தொண்டர்களின் தியாகத்தை இந்த நாளில் நினைவுகூர்கிறோம். மக்களின் நலனை மையமாகக் கொண்டே மத்திய அரசும், பாஜக ஆளும் மாநில அரசுகளும் செயல்படுகின்றன.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிய எங்களது பயணம் தொய்வில்லாமல் தொடரும். நமது கூட்டு உறுதிப்பாடு இந்தியாவை முன்னேற்றத்தின் புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்லும். இவ்வாறு பிரதமர் பதிவிட்டுள்ளார்.