

கொல்கத்தா: வரும் மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 92.72 சதவீத வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சூழலில் மேற்கு வங்கத்தின் பனிஹாட்டி பகுதியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ஆட்சி நடத்தும் திரிணமூல் காங்கிரஸ், பெண்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்சியின் காட்டாட்சியால் சந்தேஷ்காளி பகுதி பெண்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெண் மருத்துவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
முதல் கட்ட தேர்தலில் மாற்றத்துக்கான அலையை தெளிவாக காண முடிந்தது. பாஜகவுக்கு ஆதரவாகவே மக்கள் வாக்களித்து உள்ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது திரிணமூல் காங்கிரஸின் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்கும். இதன் பிறகு பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் அனைத்தும் மீண்டும் விசாரிக்கப்படும். தவறு இழைத்தவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த வகை செய்யும் மசோதா அண்மையில் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன. இதற்கு மேற்கு வங்க பெண்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.
பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 என்ற வகையில் ஓராண்டுக்கு ரூ.36,000 நிதியுதவி வழங்கப்படும். கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை திரிணமூல் சூறையாடி வருகிறது. அரசு பணிக்கு லஞ்சம், சிட்பண்ட் ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ரேஷன் ஊழல் என அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இந்த ஊழல் ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர்.
ஊடுருவல்காரர்களுக்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கிறது. இதன்மூலம் மேற்குவங்கத்தின் கலாச்சாரம் அழிக்கப்பட்டு வருகிறது. பாஜக ஆட்சி அமைத்தால் ஊடுருவல் முழுமையாக தடுக்கப்படும். ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
பனிஹாட்டியில் பெண் மருத்துவரின் தாய்: கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் மேற்குவங்க போலீஸார் ஆதாரங்களை அழித்ததாகவும் உண்மைகளை மறைத்ததாகவும் புகார்கள் எழுந்தன. கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் ரத்னா தேவ்நாத் மேற்குவங்கத்தின் பனிஹாட்டி தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். பனிஹாட்டியில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவரும் மேடையில் அமர்ந்திருந்தார்.