

கிர் சோம்நாத்: குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் முதல் முறையாக இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் புதுப்பிக்கப்பட்டு 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இக்கோயிலுக்கு பிரதமர் மோடி தலைமையில் இன்று கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குஜராத்தில் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யும் வழக்கம் இல்லை. ஆனால் தென்னிந்திய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு 10 முதல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இதே முறையை பின்பற்றி சோம்நாத் கோயிலுக்கும் முதல் முறையாக கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். இது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக தீர்த் புரோகித் சோம்புரா பிராமின் சமாஜ் தலைவர் ஸ்ரீ ஹெமால்பாய் பாட் தெரிவித்துள்ளார்.
சோம்நாத் மகாதேவ்க்கு பிரதமர் இன்று நடத்தும் மகா பூஜையைத் தொடர்ந்து இந்த கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நாட்டின் 11 முக்கிய புனித தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சோம்நாத் கோயிலின் கோபுர கலசத்தில் வேத மந்திரங்கள் முழங்க ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.