

சென்னை: இந்து மரபுகள், சடங்குகளை கேலி செய்வது வழக்கமாகிவிட்டது என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: இன்றைக்கு நம் நாட்டில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கையை பின்பற்றவும், தங்கள் சடங்குகளை செய்யவும் நீதிமன்றத்தின் தலையீட்டை நாட வேண்டியது வருத்தமாகவும், முரண்பாடாகவும் இருக்கிறது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தையொட்டி மலையின் மேல் தீபம் ஏற்ற, ஒரு தீர்க்கமான சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் ஒரு எளிய அமைதியான சடங்கைச் செய்ய முடியாவிட்டால், சொந்த நாட்டில் அரசியலமைப்பு நீதியை எங்கு பெறுவார்கள்.
இந்து மரபுகள் மற்றும் சடங்குகளை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாக கொண்டாட முடியுமா, ஆனால் புனிதமான கார்த்திகை தீபம் திருடப்பட்டு மறைந்துவிட்டது. ஏனென்றால் இந்துக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் ஏற்படும் இழப்பை ஏற்றுக்கொண்டு சமரசம் செய்வது இந்துக்கள் தான்.
அதே மற்ற மத நிகழ்வுகளுக்கும் இதையே செய்யத் துணிகிறார்களா, இந்துக்கள் சாதி, பிராந்திய மற்றும் மொழியியல் தடைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வரை இந்து மதம், அதன் நடைமுறைகளுக்கு எதிரான கேலி, அவமானங்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் தொடரும். தாங்கள் எதிர்கொள்ளும் அவமானத்தைப் பார்த்து இந்துக்கள் ஒருநாள் விழித்தெழுவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.