பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?

பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?
Updated on
3 min read

ஒருவர் இந்தியர் என்பதற்கும், குடியுரிமையை நிரூபிப்பதற்கும் எந்தவிதமான ஆவணங்கள் தேவை, எந்த ஆவணங்கள் செல்லாது என்பதில் நாளுக்கு நாள் குழப்பம் கூடி வருகிறது. 

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பதன் மூலம் இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் என்று கூற இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்த வெளியுறவுத் துறையின் விளக்கம், குழப்பத்தை இன்னும் வலுப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், இந்தியக் குடியுரிமையை நீரூபிக்க சட்டப்பூர்வ ஆதாரம் எது என்ற கேள்வியும் எழுகிறது. 

வெளியுறவுத் துறை கூறியது என்ன?

கடந்த ஜூன் 24-ம் தேதி, 1967-ம் ஆண்டு பாஸ்போர்ட் சட்டம் இயற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் ‘பாஸ்போரட் சேவா திவாஸ்’ வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு விளக்கம் அளித்தது.

அதில் ‘இந்தியர் ஒருவர் வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் என்பது குடியுரிமையை நிரூபிக்க சட்டப்பூர்வ ,உறுதியான ஆதாரமாகக் கருத முடியாது. ஆனால், சர்வதேச பயணத்தை மேற்கொள்ள அவருக்கு அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ ஆவணம்; அடையாள அட்டை மட்டும்தான்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பெரிய விவாதத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குழப்பும் விவரங்கள்

2019-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி என்ஆர்சி எனப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேடு குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை முரணாகவும் குழப்பமாகவும் இருந்தது.

அதில் ‘ஒருவர் இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க பிறந்த தேதி, பிறந்த ஊர் குறித்த எந்த ஆவணத்தையும் தாக்கல் செய்யலாம். இருப்பினும், ஏற்றுக்கொள்ளக்கூடிய இத்தகைய ஆவணங்கள் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘இந்தியக் குடியுரிமையை உறுதியாக நிரூபிக்க எந்த ஆவணம்தான் தேவை?’ எனும் கேள்வி தற்போது இந்தியர்கள் மனதில் எழுந்துள்ளது.

சரி, குடியுரிமைச் சட்டம் 1955, அரசியலமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது? 

இந்தியக் குடியுரிமை என்பது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட ஆவணத்தின் மூலமாகவோ அல்லது அந்த ஓர் ஆவணத்தை வைத்து மட்டும் உறுதி செய்வது இல்லை. 

இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, 1950 ஜனவரி 26-ம் தேதி அல்லது அதற்கு பின்னரோ மற்றும் 1987-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதிக்கு முன்னரோ இந்தியாவில் பிறந்தவராக இருந்தால், அவர் பிறப்பால் இந்தியர் ஆவார்

1987-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தால், அவரின் பெற்றோர் இருவரில் ஒருவர் இந்தியராக இருத்தல் வேண்டும்.

ஒரு நபர் 2004 டிசம்பர் 3-ம் தேதிக்குப் பின் பிறந்திருந்தால், பெற்றோர் இருவருமே இந்தியர்களாக இருந்தால் மட்டுமே பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை கோர முடியும். அல்லது பெற்றோரில் ஒருவர் இந்தியராகவும், மற்றொருவர் சட்டவிரோத குடியேறியாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் 5 தனித்துவமான வழிகள் மூலம் ஒரு நபர், தனது குடியுரிமைத் தகுதியைப் பெறுகிறார் எனப் பட்டியலிட்டது. அதில் பிறப்பு, வம்சாவளி, குடியுரிமை, பதிவு, குடியுரிமை பெறுதல் ஆகியவை மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியும் என விளக்கப்பட்டுள்ளது.

பிறந்த தேதி, இடம் அடிப்படையில் ஒருவர் ‘இந்த மண் உரிமை’ என்ற அடிப்படையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக இந்த விதிகளில் கிடுக்கிப்பிடி கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய பெற்றோருக்கு இந்தியாவில் அல்லாமல் வெளிநாடுகளில் பிறந்திருந்தால், வம்சாவளி முறை அடிப்படையில் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம். உதாரணமாக, 2004-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி அல்லது அதற்குப் பின் இந்தியப் பெற்றோருக்கு வெளிநாட்டில் குழந்தை பிறந்திருந்தால், அதை ஓராண்டுக்குள் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும். இந்திய வம்சாவளியினர் அல்லது இந்தியக் குடிமக்களைத் திருமணம் செய்துகொண்டவர்கள், குறிப்பிட்ட வசிப்பிட மற்றும் குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கு 12 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்திருக்க வேண்டும், 3-வது பட்டியலில் உள்ள சில தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.

ஏன் இவை முழுமையான ஆவணம் இல்லை?

ஆதார் கார்டு: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பக்சி அளித்த தீர்ப்பில் ‘ஆதார் கார்டு என்பது ஓர் அடையாள அட்டை மட்டும்தான். மாறாக, அது குடியுரிமையை நிரூபிக்க முழுமையான குடியுரிமை ஆவணம் ஆகாது, 

கோரிக்கைகள் மற்றும் மேல்முறையீடு, கருத்துகளை தாக்கல் செய்யும்போது ஆதார் பயன்பாடானது அடையாளச் சான்றாக மட்டுமே இருக்குமே தவிர, இந்தியக் குடியுரிமைக்கான சான்றாக இருக்காது.

 எந்தத் தனிநபரும் இந்தியாவில் 182 நாட்கள் அல்லது 12 மாதங்களுக்கு மேல் குடியிருந்துவிட்டால், அவர் ஆதார் கார்டு கோரி விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர் ஆகிறார்; ஆதார் பெறவும் தகுதியுடையவராகிறார். ஆனால், குடியுரிமை பெறுவதற்கான தகுதியாகக் கொள்ள முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை: வாக்காளர் அட்டை என்பது தேர்தல் ஆணையத்தால் வாக்களிக்க ஒருவர் தகுதியுடையவர் என்பதற்காக வழங்கப்படும் அடையாள அட்டை; வசிப்பிடத்தற்கான ஓர் ஆவணம். வாக்களிக்கும் உரிமைக்காக மட்டுமே வழங்கப்பட்ட பிரத்யேக ஆவணமே வாக்காளர் அடையாள அட்டை.

குடியுரிமையை நீரூபிக்க வாக்காளர் அடையாளர் அட்டையை ஒருபோதும் பயன்படுத்த முடியாது என்று நீண்ட காலத்துக்கு முன்பே விளக்கம் அளிக்கப்பட்டது.

பான் கார்டு: பான் கார்டும் வாக்காளர் அடையாள அட்டை போன்று குறிப்பிட்ட ஒரு துறைக்காக வழங்கப்படும் அடையாள அட்டைதான். நிதி மற்றும் வரி தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யவும், வரி செலுத்தவும், வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்ட ஓர் ஆவணம். இந்த பான் கார்டு, இந்தியாவில் வரி செலுத்தும் வெளிநாட்டினருக்கும், என்ஆர்ஐ மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும்.

வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவை இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க தகுதியான சான்றுகள், ஆவணங்கள் இல்லை என பல்வேறு நீதிமன்றங்கள் ஏராளமான தீர்ப்புகள் மூலம் உறுதி செய்துள்ளன. எதிர்காலத்தில் இதுபோன்ற ஆவணங்களை வைத்திருந்தால் மட்டுமே இந்தியக் குடியுரிமை வைத்திருப்பவர் ஆகிவிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் யாவும் அரசின் சேவைகளைப் பெற உதவும் அடையாள அட்டை மட்டுமே. ஆனால், இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955, அடிப்படை விதிகளை மீறியதாகக் கூற முடியாது.

பாஸ்போர்ட் மூலம் என்ன பயன்? 

பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு) என்பது இந்தியர்களுக்காக மட்டும் இந்திய வெளியுறவுத் துறையால் வழங்கப்படுகிறது. ஆனால், இதை மட்டும் வைத்து இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாது; முழுமையான ஆவணமாகவும் இதைக் கருத முடியாது.

 இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவது என்பது வழங்கப்படும் நபர் குறித்து உள்ளூர் போலீஸாரின் தீவிரமான விசாரணை, ஆய்வுக்குப் பின்புதான் வழங்கப்படும். தேசியப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், விண்ணப்பதாரரின் உடலமைப்பு, அடையாளம், முகவரி, ஏதேனும் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளாரா, வழக்கு ஏதேனும் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து உள்ளூர் போலீஸார் அறிக்கை அனுப்புவார்கள். அதைச் சார்ந்தே மத்திய அரசும் இருக்கிறது.

அப்படியென்றால், அடையாள அட்டைக்கும், குடியுரிமைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

பாஸ்போர்ட் வழங்கும் அதிகாரி ஒருவர், 1967 பாஸ்போர்ட் சட்டம் பிரிவு 5-ன் கீழ், விண்ணப்பத்தைப் பரிசீலித்து, தேவையான விசாரணை நடத்தி, உறுதி செய்த பின்பே பாஸ்போர்ட் வழங்குகிறார். பிரிவு 6(2)-ன் கீழ், விண்ணப்பதாரர் இந்தியாவைச் சேர்ந்தவர் இல்லை எனத் தெரிந்தால், அவருக்கு பாஸ்போர்ட் வழங்காமல் அதிகாரி நிறுத்தி வைக்கலாம். அவருக்கு பாஸ்போர்ட் வழங்குவதும், மறுப்பதும், மாநில - மத்திய அரசின் ஒப்புதலுக்கு உட்பட்டதாகும்.

ஆதலால், ஒருவருக்கு பாஸ்போர்ட் கிடைத்திருக்கிறது என்றால், அவரின் குடியுரிமை குறித்து இந்திய அரசு மனநிறைவடைந்து இருக்கிறது என்று அர்த்தம். எவ்வாறாகினும், அந்த நபர் தனது பாஸ்போர்ட் மூலம் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. 

குடியுரிமையை நிரூபிக்க பாஸ்போர்ட் முழுமையான, உறுதியான ஆவணமாக கருதப்படவில்லை; குடியுரிமைக்கான சான்றாக கருதப்படுகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியப் பாஸ்போர்ட்டை ரத்து செய்யவும், நிறுத்தி வைக்கவும், தடையிலிருந்து நீக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இருப்பினும், அவர்களால் தன்னிச்சையாக அவ்வாறு செயல்பட முடியாது. இந்த அதிகாரம் 1967-ஆம் ஆண்டின் பாஸ்போர்ட் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.

பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையால் குடியுரிமையை நிரூபிக்க முடியுமா?
செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in