செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு

செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
Updated on
1 min read

விக்டோரியா (செஷல்ஸ்): செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான "Guardian of the Blue Horizon" என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று (28.06.2026) வழங்கி கவுரவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “செஷல்ஸ் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான அந்நாட்டின் உயரிய விருதான "Guardian of the Blue Horizon" என்ற அந்நாட்டு அதிபரின் சிறப்பு விருதை செஷல்ஸ் அதிபர் டாக்டர் பேட்ரிக் ஹெர்மினி இன்று வழங்கி கவுரவித்தார்.

பிரதமரின் பசுமை செயல்பாடுகள், வளரும் நாடுகளின் நலன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள், நீலப் பொருளாதாரம், பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், கடல் வளங்களின் நிலையான மேலாண்மை, சிறிய தீவு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் பிரதமர் நரேந்திர மோடியின் நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பிரதமர் இந்த விருதை அர்ப்பணித்துள்ளார். இரு நாடுகளும் தங்களின் தூதரக உறவுகளின் 50 ஆண்டுகளைக் கொண்டாடும் நேரத்தில் வழங்கப்படும் இந்த அங்கீகாரம், நட்பை மேலும் வலுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு, மிஷன் லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், தாயின் பெயரில் மரக்கன்று நடும் இயக்கம், சர்வதேச புலிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட பசுமையான பூமியை உருவாக்கும் செயல்பாடுகளை நோக்கிய பிரதமரின் நீண்டகால அர்ப்பணிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.

நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக பிரதமருக்கு வழங்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உணவு - வேளாண்மை அமைப்பின் அக்ரிகோலா விருது, சியோல் அமைதி விருது, ஐநா-வின் 'புவி சாம்பியன்' விருது உள்ளிட்ட, சுற்றுச் சூழல் தொடர்பான செயல்பாடுகளுக்கு பிரதமருக்குக் கிடைக்கும் தொடர்ச்சியான கவுரவங்களில் இந்த அங்கீகாரமும் ஒன்றாக உள்ளது.

திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் நடவடிக்கைகள், நிலையான வளர்ச்சி முன்முயற்சிகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நம்பகமான நாடாக இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கு ஆகியவற்றுக்கு செஷல்ஸ் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்தக் கௌரவம் எடுத்துக் காட்டுகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது - பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
“கடல் முதல் வானம் வரை இந்தியா பாதுகாப்பாக மாறி வருகிறது” - ‘மனதின் குரலில்’ பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in