

லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்
ஜம்மு: பஹல்காம் தாக்குதல் வழக்கு குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள ஹபீஸ் சயீதுக்கு எதிராக என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி, தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் பாகிஸ்தானில் வசிக்கும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு (76) எதிராக கூடுதல் குற்றப் பத்திரிகையை ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ கடந்த 6ம் தேதி தாக்கல் செய்தது.
மேலும் இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடங்க ஹபீஸ் சயீதுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று என்ஐஏ கோரிக்கை விடுத்தது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், “நியாயமான, முழுமையான மற்றும் பயனுள்ள விசாரணைக்கு குற்றம் சாட்டப்பட்டவரை (சயீத்) கைது செய்து, காவலில் எடுத்து விசாரணை நடத்துவது அவசியமாகும். எனவே அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, சட்டப்படி அதை செயல்படுத்துவதற்காக ஜம்மு என்ஐஏ துணைத் தலைமை அதிகாரிக்கு (டிஜஜி) அனுப்பி வைக்கப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத், 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின் மூளையாக கருதப்படுகிறார். சயீதின் பெயர் அவரது தனிப்பட்ட முறையிலும், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் ஆகிய அமைப்புகளின் தலைவர் என்ற முறையிலும் குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.