

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகளால் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. இந்த மூவரும் கடந்த ஜூலை 28-ம் தேதி, நகரின் புறநகரில் ‘ஆபரேஷன் மகாதேவ்' என்ற பெயரில் நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
முன்னதாக இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பட்கோட்டைச் சேர்ந்த பர்வேஸ் அகமது ஜோதர், பஹல்காமை சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரை என்ஐஏ கடந்த ஜூன் மாதம் கைது செய்தது.
தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளும் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பாகிஸ்தானியர்கள் என்பதை கைது செய்யப்பட்ட இருவரும் அடையாளம் காட்டினர்.
இவர்கள் தீவிரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை வழங்கியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா, அதன் துணை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் உட்பட ஏழு பேர் மீது ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ நேற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
பாகிஸ்தானின் சதித்திட்டம், குற்றம் சாட்டப்பட்டவர்களின் பங்கு மற்றும் வழக்கில் உள்ள ஆதாரங்களை குற்றப்பத்திரிக்கை விவரிக்கிறது.
1,597 பக்கங்கள்: 1,597 பக்க குற்றப்பத்திரிகையில் லஷ்கர் கமாண்டர் சஜித் ஜாட் முக்கிய சதியாளராக குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதலை நடத்திய ஜிப்ரான், சுலைமான், ஹம்சா ஆப்கன் ஆகிய 3 தீவிரவாதிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இந்த ஒட்டுமொத்த தீவிரவாத சதித்திட்டத்தில் உள்ளூர் ஆதரவு முக்கியப் பங்கு வகித்ததை குற்றப்பத்திரிகை விவரிக்கிறது.