

அமராவதி: புதிய ஆந்திர மாநிலத்தின் ஒரே மற்றும் நிரந்தர தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து முதல் முறையாக தற்போது 28 மாவட்டங்கள் கொண்ட புதிய ஆந்திர மாநிலத்தின் வரை படத்தை தேசிய விபத்து தடுப்புத் துறை வெளியிட்டுள்ளது.
இதில் மாவட்டங்களின் எல்லைகள், வனப்பகுதிகள், சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் என அனைத்தும் துல்லியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதிகள் வாரியாகவும் அந்த வரைப்படம் தெளிவாக உள்ளது. இந்த வரைபடத்தில் அமராவதியை தலைநகரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவின் பல்நாடு, குண்டூர், கிருஷ்ணா மற்றும் என்.டி.ஆர். மாவட்டங்களில் உள்ள பகுதிகளை இணைத்து அமராவதி நகரம் என தெள்ளத்தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜெகன் ஆட்சியில் இருந்த 26 மாவட்டங்களுடன் தற்போது கூடுதலாக மார்க்காபுரம் மற்றும் போலாவரம் இணைந்து 28 மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புயல், வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரின் போது மாநில, மாவட்ட எல்லைகள் தெரிய வேண்டிய அவசியம் என்பதால், இந்த வரைபடத்தை முதல் முறையாக தேசிய விபத்து தடுப்புத் துறை தயாரித்ததாக கூறப்படுகிறது.