

என்டிஏ தலைமை இயக்குநர் அபிஷேக் சிங்
புதுடெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்-யுஜி' மறுதேர்வு எவ்வித குளறுபடி யும் இன்றி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தேசியத் தேர்வு முகமையின் (என்டிஏ) தலைமை இயக்குநர் அபிஷேக் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: "நீட் மறுதேர்வு எவ்வித குளறுபடியுமின்றி மிகச் சரியான முறையில் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசுடன் இணைந்து என்டிஏ மேற்கொண்டது. நீட் தேர்வு எழுதுபவர்களில் பெரும்பாலானோர் 17 மற்றும் 18 வயதுடைய இளம் மாணவர்கள்.
இதனால் சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் அவர்களின் மனநிலையைப் பாதிக்கும். குறிப்பாக, டெலிகிராம் போன்ற செயலிகளில் வினாத்தாள் கசிந்தது போன்ற போலித் தோற்றத்தை உருவாக்கி, சில மோசடி கும்பல்கள் மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்ற முயன்றன. போலி வினாத் தாள்களைக் காட்டிப் பணம் பறிக்கும் சைபர் குற்றங்களைத் தடுக்கவே, ஜூன் 16 முதல் 22 வரை டெலிகிராம் செயலிக்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது.
வினாத் தாள்களின் பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி முற்றிலும் எங்களின் முழுக் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக இருந்தது. நீட் தேர்வு வதந்திகளைப் பரப்புபவர்கள் மற்றும் போலி வீடியோக்களை வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி காவல் துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.