

திருவனந்தபுரம்: கேரளாவில் மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க பெண்களுக்கு மாதம் ரூ.2,500 கூப்பன் வழங்கப்படும் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பாஜக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழைப் பெண்கள் மாதந்தோறும் ரூ.2,500-க்கு மளிகை மற்றும் மருந்துப் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வகையில் ‘பக் ஷய ஆரோக்கிய சுரக் ஷா’ அட்டை வழங்கப்படும். கூடுதலாக ஏழைக் குடும்பங்களின் பெண் தலைவிகள், கணவரை இழந்தவர்கள் மற்றும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஆண்டுதோறும் ஓணம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது 2 இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 20,000 லிட்டர் இலவச தண்ணீர் வழங்கப்படும். வேளாண் துறையில், ஆதரவு தேவைப்படும் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.
தற்போதுள்ள நிலம் மற்றும் வனத்துறை சட்டங்களில் திருத்தங்கள் செய்வதன் மூலம் தோட்ட நிலங்களில் பல்வேறு பயிர் சாகுபடி அனுமதிக்கப்படும்.
எய்ம்ஸ் மருத்துவமனை கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை நிறுவப்படும். கேரள மக்களுக்கு உருவாக்கப்படும் ஒவ்வொரு வேலைவாய்ப்புக்கும் ரூ.1 லட்சம் என்ற அடிப்படையில் நிறுவனங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படும். விழிஞ்சம் துறைமுகத்தைச் சுற்றிலும் பெரிய தொழில் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.