

புதுடெல்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.
அதில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி கைகோர்த்தபடி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மூன்று தலைவர்களும் நடத்தும் 3-வது சந்திப்பு இதுவாகும்.
இந்த மாநாட்டில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் அல் நஹ்யான், எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி மற்றும் வியட்நாம் பிரதமர் லே மின் ஹங் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பங்கேற்பு
ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், உலக வர்த்தக அமைப்பின் தலைமை இயக்குநர் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ், புதிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தில்மா ரூசெஃப் மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் சோ ஜியாயி ஆகியோரும் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
உலகப் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறிப்பாக, ரஷ்யா-உக்ரைன் போர், மேற்கு ஆசிய நெருக்கடி, ஹார்முஸ் நீரிணை முற்றுகை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தகம் மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகள் ஆகியவற்றின் தாக்கங்களுக்கு மத்தியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.