

மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள 7 தீவுகளில் ஒன்று மசாகோன். இந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 1977-ம் ஆண்டு, 2 மர்ம நபர்கள் 7 ரூபாய் 65 பைசாவை பறித்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட நபர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 மர்ம நபர்களை தேடி வந்தனர். சுமார் 50 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கின் விசாரணை மசாகோன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூழலில் மசாகோன் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது மாஜிஸ்திரேட் ஆர்த்தி குல்கர்னி கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக வழக்கு நீடிக்கிறது. வழக்கை தொடுத்த புகார்தாரர் உயிரோடு இருக்கிறாரா? ஏழு ரூபாயை திருடிய மர்ம நபர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது போலீஸாருக்கு தெரியவில்லை. வழிப்பறி செய்யப்பட்ட தொகை ரூ.2,000-க்கு குறைவாக இருப்பதால் சுருக்க விசாரணை மூலம் விரைவாக வழக்கு முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.
இதுபோன்ற வழக்குகளால் நீதிமன்றத்தின் சுமை அதிகரிக்கிறது. எனவே, வழக்கு ரத்து செய்யப்படுகிறது. புகார் தாரர் உயிரோடு இருந்தால் அரசு தரப்பில் அவருக்கு ரூ.7.65-ஐ வழங்க வேண்டும். இவ்வாறு மாஜிஸ்திரேட் ஆர்த்தி உத்தரவிட்டார்.
வழக்கு குறித்து சட்ட நிபுணர்கள் கூறியதாவது: இன்றைய காலத்தில் 7.65 ரூபாய் என்பது மிகவும் சொற்ப தொகை. ஆனால் கடந்த 1977-ம் ஆண்டில் இந்த தொகையின் மதிப்பு அதிகம். அப்போது ஒரு நபர் சராசரியாக ரூ.200 மட்டுமே ஊதியம் பெற்றார். ஒரு நாளிதழின் விலை 40 பைசாவாக இருந்தது. ஒரு கிலோ கோதுமையின் விலை ரூ.1 ஆக இருந்தது.
இதன் காரணமாக 7.65 ரூபாயை பறிகொடுத்த நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸாரின் அலட்சியம், கவனக்குறைவால் சுமார் 50 ஆண்டுகள் வரை வழக்கு நீடித்திருக்கிறது. இவ்வாறு சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.