“மம்தா பானர்ஜி தோல்வியை ஏற்க வேண்டும்” - மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்

“மம்தா பானர்ஜி தோல்வியை ஏற்க வேண்டும்” - மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்
Updated on
1 min read

கொல்கத்தா: தேர்தல் தோல்வியை தான் ஏற்கப் போவதில்லை என்றும், தான் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில், அவர் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மம்தா பானர்ஜி தனது தோல்வியை கண்ணியத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிசிடிவி காட்சிகளில் முறைகேடு நடந்ததாகக் கூறுவது, வாக்குச்சாவடிகளில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக புகார் கூறுவது போன்றவை அவருக்கு பொருத்தமானவை அல்ல. இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை அவர் தவிர்க்க வேண்டும்.

இந்த தேர்தலில் இந்துக்களின் வாக்குகள் 20% அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்தனர். அவர்களை தேர்தல் ஆணையம் கூலிக்கு அமர்த்தவில்லை. மக்களின் தீர்ப்பை கேள்விக்குள்ளாக்குமு் அரசியல் கட்சிகளுக்கு சிறந்த எதிர்கலாம் இருக்காது.

மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் ஒரே தேர்தல் ஆணையம்தான் தேர்தல்களை நடத்தியது. கேரளாவில் ஜனநாயகம் வெற்றி பெற்றது என்றும் மேற்கு வங்கத்தில் அது பிரச்சினையை ஏற்படுத்தியது என்றும் சொல்வது ஏற்கத்தக்கதல்ல. ஏதேனும் ஒரு நிலைப்பாட்டை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அமித் ஷாவின் துல்லியமான திட்டமிடலும், முழு கட்சியின் ஒருங்கிணைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம். வங்கத்தின் பாஜக தொண்டர்கள் தனித்துவமானவர்கள். இந்த வெற்றியைக் காண்பதற்காக அவர்கள் ஏராளமான தியாகங்களை செய்திருக்கிறார்கள். இரண்டு முஸ்லிம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட இந்து தொண்டர்கள் கொல்லப்பட்டனர். எனினும், யாரும் அச்சமடையவில்லை. உணவோ, பாதுகாப்போ இல்லாமல் போராடிய அவர்கள் அனைவரையும் நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

மேற்கு வங்கத்தில் சிற்சில வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றை எங்கள் கட்சி ஏற்றுக்கொள்ளாது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். எங்கள் தொண்டர்களுக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாம் திரிணமூல் காங்கிரஸைப் போல மாற வேண்டியதில்லை. மக்கள் அவர்களை விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகங்களைக் கைப்பற்றுவது, எரிப்பது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது. நீங்கள் அவ்வாறு செய்தால் காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அப்போது நாங்கள் உங்களுக்கு உதவ மாட்டோம்” என தெரிவித்தார்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 206 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, அக்கட்சி விரைவில் அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 212 இடங்களைப் பெற்ற திரிணமூல் காங்கிரஸ், இம்முறை 80 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது.

“மம்தா பானர்ஜி தோல்வியை ஏற்க வேண்டும்” - மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார்
பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்களின் பதவிகளை ரத்து செய்ய குடியரசு தலைவரிடம் பகவந்த் மான் முறையீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in