

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகியோரின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, எட்டு உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்தானது.
முன்னதாக, மக்களவையில் பேசிய கிரண் ரிஜிஜு, ‘‘அவை திறம்படவும் பயனுள்ள வகையிலும் செயல்படுவதற்குச் சில எல்லைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். விதிமுறைகள் அலுவல் நடைமுறைகளுக்கானவை.
நேற்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கூறியதுபோல், அவையின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால், நாங்களும் அதற்கேற்பச் செயல்படுவோம். எந்தெந்த விஷயங்களில் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்து கொண்டு அதற்கான உறுதிமொழியை அளித்தால் நாங்களும் அதற்கு இணக்கமாகச் செயல்படுவோம். எனவே, எத்தகைய உறுதிமொழிகளை அளிக்க இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்த்தரப்பினரை எதிர்ப்பது, சபாநாயகரின் மேடை மீது காகிதங்களை வீசுவது, மக்களவை செயலரின் மேசை அருகே சென்று போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆளும் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் மீதான விவாதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.
பின்னணி என்ன?
முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.3-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் காகிதங்களையும் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-வது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.