

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த விஜய் சர்மா, கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, கருணை அடிப்படையில் அவரது மனைவி நீரஜ் சர்மாவுக்கு அதே நீதிமன்றத்தில் எழுத்தர் பணி வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி நீரஜ் சர்மா மீது ஸ்கார்பியோ கார் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பான போலீஸ் விசாரணையில், தாயின் அரசு வேலையையும், குடும்பச் சொத்துகளையும் கைப்பற்றும் நோக்கில், அவரது மகள் ஆயுஷி இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, சட்டப் படிப்பின் இறுதியாண்டு மாணவியான ஆயுஷி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இதனிடையே, கடந்த ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த தனது தந்தையையும் அவரே கொலை செய்திருக்கலாம் என்று மாணவியின் தாய் மாமன் தற்போது சந்தேகம் தெரிவித்துள்ளார்.