

திருவனந்தபுரம்: கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை காங்கிரஸ் வரவேற்றுள்ளது. இடதுசாரி கட்சியும் பாஜகவும் நிராகரித்துள்ளன.
கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 இடங்களுக்கு கடந்த ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணி இங்கு ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆளும் இடதுசாரி கூட்டணி தோல்வியை சந்திக்கும், பாஜக சில இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்படிருந்தது. இந்த முடிவுகளை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப், கட்சியின் மூத்த தலைவர் கே.முரளீதரன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் கணித்தது போலவே கருத்துக்கணிப்பு முடிவு வெளியாகியுள்ளது. இத்தேர்தலில் நாங்கள் வெற்று பெறுவது உறுதி. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யுடிஎப் ஆட்சி அமைக்கும். முன்னதாக முதல்வர் யார் என்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
எல்டிஎப் கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் சாதிக் அலி ஷிகாப் தங்கல் கூறுகையில், “கருத்துக்கணிப்பு முடிவில் வெளியான தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை நாங்கள் பெறுவோம்” என்றார். அதேவேளையில் இந்த முடிவுகளை மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் (எல்டிஎப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஏற்கவில்லை.
எல்டிஎப் தரப்பில் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்ட தலைவர்கள் கூறுகையில், “இந்தக் கருத்துக்கணிப்பு முடிவுகள் எவ்வித முக்கியத்துவமும் அற்றவை. 2021-ம் ஆண்டு தேர்தலில் எல்டிஎப் தோல்வி அடையும் என கருத்துக்கணிப்புகள் வந்தன. ஆனால் அவை தவறென நிரூபிக்கப்பட்டது.
இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. நாங்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவோம். பாஜக 3 முதல் 14 இடங்கள் வரை வெற்றி பெறும் என்பதும் ஏற்க முடியாது. அக்கட்சி ஒரு இடத்தைக் கூட கைப்பற்றாது” என்று தெரிவித்தனர். பாஜக தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் கூறுகையில், “கேரளாவில் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது. அதே சமயம் யுடிஎப் கூட்டணிக்கு சாதகமான அலை எதுவும் வீசவில்லை. கணிக்கப்பட்டதை விட அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.