13 நாடுகள் வழியாக 22,000 நாட்டிக்கல் மைல் பயணிக்கும் இந்திய போர் கப்பல்
புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சியிலுள்ள கடற்படை தளத்திலிருந்து நேற்று ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பலின் நீண்ட தூர பயணத்தை தெற்கு கடற்படை கமாண்டிங் இன் சீப் அதிகாரியும், துணை தளபதியுமான சமீர் சக்சேனா தொடங்கி வைத்தார்.
இந்த கப்பல் 22 ஆயிரம் நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு பயணிக்க உள்ளது. 13 நாடுகள் வழியாக 18 துறைமுகங்களுக்கு பயணம் செய்யும். இதுகுறித்து கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ஐஎன்எஸ் சுதர்ஷினி கப்பல் நீண்ட தூர பயணத்தை தற்போது தொடங்கியுள்ளது.
இந்த ‘வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம்’ இந்தியாவின் கடல்சார் முயற்சிக்கு ஒரு சக்திவாய்ந்த அடையாளமாகத் திகழ்கிறது. இது உலகளாவிய கடல்சார் நடவடிக்கைகளில் நாட்டின் முக்கியத்து வத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கடற்படை தின விழாவில் பங்கேற்று சாசகங்கள் செய்தது” என்றார்.
மேலும் பிரான்ஸில் வரும் மார்ச்-ஏப்ரலில் நடைபெறவுள்ள கப்பல் கண்காட்சி திருவிழாவிலும் பங்கேற்கவுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் ஜூலையில் அமெரிக்காவில் நடைபெறவுள்ள அந்நாட்டின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்கும். அப்போது நியூயார்க் நகருக்கு இந்தக் கப்பல் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
