

ஜம்மு: ஜம்முவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே கண்காணிப்பு நடவடிக்கைகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஜம்முவின் கூர் பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே ட்ரோன் ஒன்று பறந்து வந்தது. அதை அப்பகுதியில் பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். உடைந்த ட்ரோனில் இருந்து 64 ஜிபி மெமரி கார்டு ஒன்று மீட்கப்பட்டது.
அதை தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே இந்திய ராணுவத்தினர் முகாமிட்டிருக்கும் பகுதிகளின் வீடியோக்கள் மற்றும் படங்கள் பதிவாகியிருந்தன. இந்த ட்ரோன் சீனா தயாரிப்பு என நம்பப்படுகிறது. இதில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
இந்த ட்ரோன் பறந்து வந்த பாதை, யார் எங்கே இருந்து இயக்கியது போன்ற தகவல்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இச்சம்பவத்தையடுத்து எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய வான் எல்லைப் பகுதியில் பறந்து உளவு பார்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டால் தக்க பதிலடி கொடுப்போம் என ராணுவம் எச்சரித்துள்ளது.