

குவாஹாட்டி: அசாமில் சதம் அடிப்போம் என்றும் மேற்கு வங்கத்தில் இரட்டைச் சதம் அடிப்போம் என்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக கடந்த 23-ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்டத் தேர்தலிலேயே பாஜக 110 இடங்களை வெற்றி பெறும் என்று என்னால் முழு நம்பிக்கையுடன் சொல்ல முடியும். இந்த முறை அசாமில் 100 இடங்களில் வெல்வோம். மேற்கு வங்கத்தில் 200 இடங்களைப் பெறுவோம். அசாமில் சதம் அடிப்போம், மேற்கு வங்கத்தில் இரட்டைச் சதம் அடிப்போம்.
மேற்கு வங்க தேர்தலில் பாஜக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், சுனாமி வந்துவிட்டது என்று நம்பிக்கையுடன் சொல்வேன். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. மேற்கு வங்கத்தில் 2016, 2019, 2021-ல் நடைபெற்ற தேர்தலை நேரில் பார்வையிட்டேன்.
ஆனால் இந்த முறை மக்கள் மத்தியில் பாஜகவுக்கான ஆதரவு முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்திருப்பதை உணர முடிகிறது. மக்கள் இப்போது பாஜகவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கத் தொடங்கி விட்டனர். மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று மக்கள் தீர்க்கமாக நம்புகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.