

மேற்கு வங்கம் நாடியா மாவட்டம் நபாத்விப் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். படம்: பிடிஐ
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் 29-ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக கடந்த 23-ம் தேதி 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் நேற்று பாரா நகரில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், "மேற்கு வங்கம் தனது பழைய பெருமையை மீட்டெடுக்கவும், அச்ச அரசியலைத் தீர்க்கமாக நிராகரிக்கவும் தயாராக உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் மீது ஊழல் மற்றும் திருப்திப்படுத்தும் அரசியல் புகார்களைக் கூறி கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் குணால் கோஷ், முதற்கட்ட வாக்குப் பதிவில் தங்கள் கட்சி வலுவாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும் அவர் உறுதிப்படத் தெரிவித்தார்.
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்களான பிரமோத் திவாரி மற்றும் அகிலேஷ் பிரசாத் ஆகியோர் நேற்று கூறும்போது, "சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் தீர்க்கமான பங்கை வகிக்கும்" என்று உரிமை கோரினர். மேற்கு வங்கத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் எந்தக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.