

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 2 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணத்தை 2 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
எட்டாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியக் கட்டமைப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்ய ஊழியர் சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ள நிலையில் இந்த உயர்வு அமலுக்கு வருகிறது.
மத்திய அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணத்தை மாற்றி அமைக்கிறது. வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
ஊழியர்கள் பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் அவர்களின் வாங்கும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்கவும் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியமும் ஓய்வூதியமும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இது உண்மையான வருமானத்தை பாதுகாக்க உதவுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த உயர்வு ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வந்த நிலையில் நிலுவைத் தொகையுடன் அமல்படுத்தப்பட்டது. இதனால் பணியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.