

புது டெல்லி: மத்திய சிறுபான்மையினர் நலத் துறை இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் ஆலோசனையின்பேரில், ஜார்ஜ் குரியன் அளித்த ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஏற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளார்.
ஜார்ஜ் குரியனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் ஜூன் 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் குரியனை மீண்டும் வேட்பாளராக நிறுத்த வேண்டாம் என்று பாஜக முடிவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜார்ஜ் குரியன் ஆகஸ்ட் 2024-ல் மாநிலங்களவை உறுப்பினரானார். அவர் ஜூன் 9, 2024 அன்று மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றார். பின்னர் ஜூன் 11, 2024 அன்று சிறுபான்மையினர் நலத் துறை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஆகியவற்றின் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மத்திய அமைச்சரவையில் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒரே அமைச்சராக ஜார்ஜ் குரியன் இருந்தார்.
ஜார்ஜ் குரியன் இதற்கு முன்பு தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்தின் துணைத் தலைவராகவும், அப்போதைய ரயில்வே துறை மத்திய இணை அமைச்சரான ஓ.ராஜகோபாலின் சிறப்புப் பணி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்த்தில் பிறந்த ஜார்ஜ் குரியன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.