

பெங்களூரு: ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்கள் மற்றும் நிதி சேர்த்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பெங்களூருவில் 8 இடங்களில் சோதனை நடத்தினர்.
என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு பெங்களூரு மற்றும் மும்பையில் நடத்திய சோதனையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த 15 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இர்பான் நசீர், அஹமது அப்துல் காதர், முகமது தவுகிர் மஹ்மூத், ஸுஹாப் ஹமீத் ஷகீல் மன்னா, முகமது ஷிஹாப் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் ஆள் சேர்த்தது உறுதி செய்யப்பட்டது.
4 பிரிவுகளின் கீழ் வழக்கு: மேலும் இக்ரா நல அறக்கட்டளை, கைடன்ஸ் ஃபார் மேன்கைண்ட் அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததும், தனி நபர்களிடம் இருந்து நிதி வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்நியச் செலாவணி மோசடி: இந்த வழக்கு விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதனை விசாரித்தனர். அதில் அறக்கட்டளைகள் மூலம் அந்நியச் செலாவணி மோசடி, நிதி மோசடி நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள், பெங்களூருவில் நேற்று இக்ரா நல அறக்கட்டளையின் அலுவலகம், குர்ஆன் வாசகர் வட்ட அலுவலகம், கைடன்ஸ் ஃபார் மேன்கைண்ட் அறக்கட்டளை, அதன் நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகள் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அறக்கட்டளைகள் மூலம் முஸ்லிம் இளைஞர்களுக்கு ஐஎஸ் அமைப்பின் கருத்துகளை பரப்பியது தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குர்ஆன் வாசகர் வட்டத்தின் வாயிலாக வாராந்திர கூட்டங்களை நடத்தி தீவிரவாத கருத்துகளை பரப்பியது தெரியவந்துள்ளது. இக்ரா அறக்கட்டளை ‘ஆளுமை மேம்பாடு’ என்ற பெயரில் பயிலரங்கம் நடத்தி இளைஞர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறக்கட்டளைகள் செல்வந்தர்களிடம் நிதி திரட்டி, இளைஞர்களை துருக்கி வழியாக சிரியாவுக்கு செல்ல உதவியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.