

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் மூதறிஞர் ராஜாஜியின் மார்பளவு சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் மற்றும் ஒரே கவர்னர் ஜெனரலான ஸ்ரீ சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை கவுரவிக்கும் வகையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் ராஜாஜி விழா நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் மகாத்மா காந்தி சிலைக்கு எதிரே அசோக மண்டபம் அமைந்துள்ளது. இதற்கு அருகில் உள்ள பிரம்மாண்ட திறந்த படிக்கட்டில், எட்வின் லுட்யன்ஸின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு இருந்தது.
ஆங்கிலேயர் ஆட்சியின் பொறியாளரான இவர் டெல்லியை வடிவமைத்தவர் ஆவார். எட்வினின் இந்த சிலைக்கு பதிலாக ராஜாஜியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ராஜாஜியின் சிலையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் மற்றும் ராஜாஜியின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நடைபெற்ற ராஜாஜி விழாவில் திரவுபதி முர்மு கலந்து கொண்டார்.
அங்கு ராஜாஜியின் வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்த புகைப்படம் மற்றும் புத்தக கண்காட்சியை அவர் சுற்றிப் பார்த்தார். இக்கண்காட்சியை இன்று (பிப்ரவரி 24) முதல் மார்ச் 1 வரை பொதுமக்களும் வந்து பார்வையிடலாம். இக்கண்காட்சியில் பாரத ரத்னா ராஜாஜியின் வாழ்க்கை குறித்த திரைப்படமும் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பேசுகையில், “வரும் 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, ராஜாஜி போன்ற தலைவர்கள் கருத்துகள் மற்றும் லட்சியங்களால் நம்மை ஊக்குவிக்கின்றனர். ராஜாஜியின் கனவுகளை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும். ராஜாஜியின் ஆளுமை மற்றும் பணியால் ஈர்க்கப்பட்டு, இந்திய மக்கள் ‘முதலில் தேசம்’ என்ற உணர்வோடு தொடர்ந்து முன்னேறுவார்கள்" என்றார்.
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் பேசுகையில், “ராஜாஜி விழாவை நாம் கொண்டாடுவதன் மூலம், காலனித்துவ மரபில் இருந்து விடுபடுவதற்கான பயணத்தில் மற்றொரு மைல் கல்லை நாம் எட்டியுள்ளோம். இந்தியா காலனித்துவ செல்வாக்கில் இருந்து விலகிச் செல்கிறது. நிர்வாகம், சட்டம், கல்வி, கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
விழாவில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அர்ஜுன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், எல். முருகன், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.