

ராஜமுந்திரி: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி லாலாசெருவு பகுதியில் நேற்று காலை பால்காரரிடம் பால் வாங்கிய பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் சிகிச்சை பலனின்றி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 12 பேர் தற்போது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து பால்காரரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ‘‘உணவு பொருட்களில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்க உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
இது தொடர்பாக மாநில மருத்துவத் துறை ஆணையர் வீரபாண்டியன் பேசுகையில், ‘‘லாலாசெருவு பகுதியில் வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது. 126 பேருக்கு பால்காரர் பால் விநியோகம் செய்துள்ளார். அந்த பால் சாம்பிள் கொண்டு ஆய்வு செய்ததில் அதில் கலப்படம் இருந்தது ஊர்ஜிதம் ஆகியது. இதனை தொடர்ந்து பால்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்" என்றார்.