“ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிக்கை

“ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: அயோத்தி ராமர் கோயில் காணிக்கை தொடர்பாக பரப்பப்படும் தவறான, ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்த அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்ததேவ் கிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி ஸ்ரீராமர் கோயில் தொடர்பாக கடந்த சில நாட்களாக பேசப்படும் சம்பவங்களால் நாங்கள் அதிர்ச்சியும், வேதனையும், மிகுந்த துயரமும் அடைந்துள்ளோம்.

அனைத்து ராம பக்தர்களின் மற்றும் ராம சேவகர்களின் பிரதிநிதிகளாக இங்கு சேவை செய்யும் நாங்கள், இது குறித்து நியாயமான விசாரணை நடத்தவும், ராம பக்தர்களுக்கு உறுதியளிக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா (அறக்கட்டளை) பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஷ்ரா ஆகியோரிடமிருந்து ராஜினாமா கடிதங்கள் பெறப்பட்டுள்ளன.

அறக்கட்டளை தனது அடுத்த கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கும். பிரபு ஸ்ரீராமரின் சேவையில் அர்ப்பணிப்பதற்காக, அறக்கட்டளையின் அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் வெள்ளி செங்கற்கள், ஆபரணங்கள் போன்றவற்றை வழங்கிய விசுவாசமுள்ள பக்தர்களுக்கு அறக்கட்டளை உறுதியளிக்கிறது. அந்தப் பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பான கணக்கு விபரங்களுடன் பத்திரமாக உள்ளன.

கோவில் உண்டியல்களில் இருந்து பெறப்பட்ட பணம் தொடர்பான சம்பவத்தைப் பொறுத்தவரை, அறக்கட்டளையின் கோரிக்கையின் பேரில் உத்திரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்ட S.I.T. (சிறப்பு விசாரணைக் குழு) வழங்கிய இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், அறக்கட்டளை எஃப்.ஐ.ஆர் (F.I.R.) பதிவு செய்துள்ளது மற்றும் அதன் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தொடர்கின்றன.

எதிர்காலத்தில் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வோம் என்று நாங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம்.

குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தகுந்த கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்.

சமூக விரோத, மத விரோத, சுயநல சக்திகள் சனாதன தர்மத்தின் மீது களங்கம் விளைவிக்க முயல்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தயவுசெய்து பரப்பப்படும் தவறான மற்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம், மற்றவர்களையும் இதற்கு பலியாகாமல் தடுத்திடுங்கள்.

இந்த மேகங்கள் கலைந்து, இருள் நீங்கி, சத்திய சூரியனின் ஒளி வீசும் என்றும், ஸ்ரீராம பக்தியின் பலத்த ஓட்டம் தொடர்ந்து தடையின்றி பாயும் என்றும் நாங்கள் நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம்” - ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிக்கை
“ராவணன் சீதையை மட்டுமே திருடினார். ஆனால் நீங்கள்...” - துறவி திரேந்தர் சாஸ்திரி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in