

புதுடெல்லி: நீட் மறுதேர்வு வரை டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், 15 கோடி பயனாளர்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? என டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
நீட் வினாத்தாள் டெலிகிராம் செயலி மூலம் கசிந்தது விசாரணையில் தெரியவந்ததால், நீட் மறுதேர்வு வரும் 22ம் தேதி முடியும் வரை டெலிகிராம் செயலிக்கு மத்திய அரசுத் தடை விதித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெலிகிராம் செயலி நிறுவனத்தில் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், ”டெலிகிராம் செயலியின் ஒரு பயனாளர் 40 பாட் கணக்குகளை உருவாக்க முடியும். ஆனால் வாட்ஸ் அப் செயலியில் ஒரு கணக்கை மட்டுமே உருவாக்க முடியும். டெலிகிராமில் உருவாக்கப்படும் பாட் வாயிலாகத் தகவல்களை மொத்தமாகப் பகிர முடியும். வாட்ஸ் அப் செயலி, ஃபேஸ்புக் போன்றவற்றில் இத்தகைய பிரச்சினை இல்லை.
மேலும் டெலிகிராம் செயலி கிளவுட் தொழில் நுட்பத்தில் இயங்குவதால் ஒரு கணக்கை முடக்கினால் கூட யாரோ ஒருவர் தொடர்ந்து அந்தக் கணக்கை வேறு பெயரில் இயக்க முடியும். சிபிஐ, காவல்துறை போன்ற அமைப்புகள் அசல் பயனாளரைக் கண்டுபிடிக்க முடியாது. எனவேதான் டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது” என்றார்.
அப்போது நீதிபதி தேஜஸ் கரியா,”குறிப்பிட்ட மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 15 கோடி மக்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும் ? யாரோ ஒருவரின் உரிமைகளைப் பாதுகாக்க யாரோ ஒருவரின் உரிமைகளை தடுக்க முடியுமா, வினாத்தாள் கசிவு தடுப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த செயலியை முடக்க முடியுமா, வினாத்தாள் கசிவு வேகமாகப் பரவும்போது எப்படி அதைத் தடுப்பீர்கள் ?” என்றார்.
இதற்குப் பதில் அளித்த துஷார் மேத்தா, ”அனுராதா பசின் வழக்கில் உச்ச நீதிமன்றமே சமூக வலை தளங்களை முடக்க அனுமதித்து தீர்ப்பு அளித்துள்ளது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதால் தான் டெலிகிராம் செயலியை மத்திய அரசு ஆழ்ந்த ஆலோசனைக்குப் பிறகே முடக்கியுள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று வாதிட்டார்.
டெலிகிராம் செயலி சார்பில் மூத்த வழக்கறிஞர் துருவ் மேத்தா ஆஜராகி, ”அனுராதா பசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்த விவகாரத்தில் பொருத்த முடியாது. டெலிகிராம் செயலிக்கு விதித்த தடை அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தடையை நீக்க உத்தரவிட வேண்டும்“ என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.