

பெங்களூரு: பெங்களூருவில் மாமியாரின் கொடுமை காரணமாக 35 வயது மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள சோழ தேவனஹள்ளியை சேர்ந்தவர் புனித்குமார் (39). தனியார் நிறுவன ஊழியரான இவர் தனது மனைவி சுஷ்மா (35), மகன் தர்ஷன் (4) மற்றும் தனது தாயார் கல்பனா (62) ஆகியோருடன் வசித்து வந்தார். மென்பொருள் பொறியாளரான சுஷ்மா கடந்த 2 ஆண்டுகளாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், புனித்குமாரின் தாயார் கல்பனாவுக்கும், மனைவி சுஷ்மாவுக்கும் இடையே கூடுதல் வரதிட்சணை தொடர்பாக சச்சரவு நீடித்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் சுஷ்மா சமைத்த உணவு ருசியாக இல்லை எனக் கூறி, கல்பனா அவரை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் இனி சமையலறைக்கு போகக் கூடாது என கூறியுள்ளார். இந்த சண்டையில் புனித்குமாரும் தன் மனைவி சுஷ்மாவை திட்டியதாக தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த சுஷ்மா படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். .
சுஷ்மாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீஸார், கணவர் புனித்குமார், அவரது தாய் கல்பனா மீது வரதட்சிணை கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று இருவரையும் கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.