

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டம் மைன்பாட் என்ற பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த சுக்மானியா பாய், தனது 90 வயது மாமியாரை முதுகில் சுமந்தபடி சுட்டெரிக்கும் வெயிலில், காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து 9 கிலோ மீட்டர் நடந்து சென்றுள்ளார்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. வங்கியில் ஓய்வூதியம் (சுமார் ₹1,500) பெற வேண்டுமானால், பயனாளிகள் நேரில் வந்து கைரேகை அல்லது அடையாளச் சரிபார்ப்பு செய்ய வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளதால், இப்பெண் கடந்த சில மாதங் களாகவே தன் மாமியாரைச் சுமந்து இந்தத் துயரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
காடுகள் நிறைந்த இப்பகுதியில் போக்குவரத்து வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம். முன்பெல்லாம் ஓய்வூதியப் பணம் கிராமங்களிலேயே நேரடியாக வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதால் இத்தகைய அவதிக்குள்ளாக நேரிடுவதாகவும் அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார்.
‘டிஜிட்டல் இந்தியா' மற்றும் ‘மக்களைத்தேடி நலத்திட்ட உதவிகள்' போன்ற அரசின் அறிவிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், தொலைதூரக் கிராமப்புறங்களில் வாழும் முதியவர்கள் தங்களின் அடிப்படை உரிமைகளைப் பெறக்கூட இன்றும் எவ்வளவு கடுமையாகப் போராட வேண்டியுள்ளது என்பதை இந்தக் காணொலி வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.