இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க காங்கிரஸ் விரும்புகிறது: பாஜக

ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி செயற்கைக்கோள் புகைப்படம்

ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி செயற்கைக்கோள் புகைப்படம்

Updated on
2 min read

புதுடெல்லி: “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ள பாஜக, “சீனா கூட ஈரானிடம் இருந்து விலகியே நிற்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘ஈரானை பல ஆண்டுகளாக ராஜதந்திர ரீதியாக பாதுகாத்து, மறைமுக பயங்கரவாத குழுக்களுக்கான ஆதரவை புறக்கணித்து, அதன் எண்ணெய்யின் பெரும்பகுதியை வாங்கிய சீனா கூட இப்போது ஈரானிடம் இருந்து வெகுதொலைவில் விலகியே நிற்கிறது.

வளைகுடா முழுவதும் பொறுப்பற்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்தாலும், முக்கிய எண்ணெய் கப்பல் பாதைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும் ஈரானின் பக்கம் இந்தியா கண்மூடித்தனமாக நிற்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

இத்தனைக்கும் பல லட்சம் இந்தியர்கள் வசித்து வரும், பணிபுரியும் ஒரு பிராந்தியத்தில் இந்தியா, ஈரான் பக்கம் சாய வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தேசிய நலன் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றால் வழிநடத்தப்பட வேண்டும். காலாவதியான காங்கிரஸின் சித்தாந்த கட்டாயங்களால் அல்ல’’ என தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘பொய் சொல்வதையும், தவறாக வழிநடத்துவதையும் ராகுல் காந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும். ஈரான் போர் கப்பல் மீதான தாக்குதல் சம்பவம் இந்திய கடல் எல்லையில் நிகழவில்லை. இலங்கை கடல் எல்லையிலும் நிகழவில்லை. இந்திய, இலங்கை கடல் எல்லைகளுக்கு அப்பால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எனவே, இதனால் இந்தியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் மற்றும் பணியாற்றும் சுமார் 90 லட்சம் இந்தியர்கள் குறித்து சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?

மேற்கு ஆசியாவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், லட்சக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பு ஒரு தேசிய கவலையாக இருக்க வேண்டிய ஒரு நேரத்தில், காங்கிரஸ் தலைமை அவர்களுக்காக ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மவுனம், அவர்களின் முன்னுரிமைகளை அம்பலப்படுத்துகிறது. காங்கிரஸ் அதன் வாக்குரிமையைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது’’ என விமர்சித்துள்ளார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், ‘‘உலகம் தற்போது அதிர்வுகளால் நிரம்பிய ஒரு கட்டத்துக்குள் நுழைந்துள்ளது. கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் எண்ணெய் விநியோகம் ஆபத்தில் உள்ளது. நமது இறக்குமதிகளில் 40%-க்கும் மேற்பட்டவை ஹோர்முஸ் நீரிணை வழியாக நடப்பவை. அந்தப் பாதை தற்போது மூடப்பட்டுள்ள நிலையில், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி விநியோகத்தில் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும்.

இந்த மோதல் நம் வீட்டின் (நாட்டின்) வாசலுக்கே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஓர் ஈரானிய போர்க் கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் இதுவரை எதையும் கூறவில்லை.

இப்படிப்பட்ட நேரத்தில், நாட்டை வழிநடத்த ஒரு உறுதியான தலைமை நமக்குத் தேவை. ஆனால் அதற்கு பதிலாக, இந்தியாவின் தன்னாட்சியை ஒப்படைத்து சமரசம் செய்து கொண்ட பிரதமர்தான் நமக்கு உள்ளார்’’ என விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி செயற்கைக்கோள் புகைப்படம் </p></div>
“தேசிய அரசியலுக்கு திரும்புகிறார் நிதிஷ் குமார்!” - அமித் ஷா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in