‘அதானி குழுமத்தில் பினாமி நிதி’ - ஜேபிசி விசாரணையை பிரதமர் மோடி தடுப்பதாக காங். குற்றச்சாட்டு

‘அதானி குழுமத்தில் பினாமி நிதி’ - ஜேபிசி விசாரணையை பிரதமர் மோடி தடுப்பதாக காங். குற்றச்சாட்டு
Updated on
2 min read

புதுடெல்லி: பினாமி நிதியைப் பயன்படுத்தி அதானி குழுமத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பங்குகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையை பிரதமர் மோடி தடுப்பதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், ‘‘அதானியுடன் நெருங்கிய தொடர்புடைய சாங் சுங்-லிங் மற்றும் நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகியோர், பினாமி நிதியைப் பயன்படுத்தி ஆதானி குழுமத்தில் பெருமளவு பங்குகளை வாங்கி இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் ஊழல் அறிக்கைத் திட்டம் (OCCRP) வெளியிட்டிருக்கும் ஆதாரங்களின்படி, சாங் சுங்-லிங், நாசர் அலி ஷபான் அஹ்லி ஆகிய இருவரும் சுவிஸ் வங்கியொன்றிடம் இதனை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னர் நம்பப்பட்டதை விட அதிக பங்குகளை அவர்கள் ஆதானி நிறுவனங்களில் வைத்துள்ளனர். 2023 வரை இதன் மதிப்பு சுமார் 3 பில்லியன் டாலர்கள் ஆகும்’’ என தெரிவித்துள்ளார்.

OCCRP என்பது ஜார்ஜ் சோரஸ் மற்றும் ராக்ஃபெல்லர் பிரதமர்ஸ் ஃபண்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் நிதி உதவியுடன் இயங்குவதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், உரிய வேகத்துடன் செபி விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது பதிவில், ‘‘அதானி வணிகக் குழுமத்துடன் தொடர்புடைய 24 பங்கு பரிவர்த்தனை வழக்குகளில் 22 வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. இவற்றின் மீதான விசாரணைகளில் செபி எந்தத் தெளிவான முன்னேற்றத்தையும் காட்டவில்லை.

இதில், ஆதானி குழும நிறுவனங்களில் உள்நாட்டு வர்த்தக குற்றச்சாட்டுகள், குறைந்தபட்ச பொது பங்குதாரர் விதிமுறை மீறல், 25 ஆகஸ்ட் 2023 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு செபி தெரிவித்த 13 “சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள்”, ஷெல் நிறுவனங்கள் மூலம் ரூ.20,000 கோடி ஆதானி குழுமத்திற்குள் பணமோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆகியவையும் அடங்கும். இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2023 மார்ச் 2 அன்று பிறப்பித்த உத்தரவு, மூன்று ஆண்டுகளாக முடிவின்றி நீடித்து வருகிறது.

கடந்த 2014 நவம்பரில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “பொருளாதார குற்றவாளிகளுக்கான பாதுகாப்பான தங்குமிடங்களை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம், பணமோசடிகாரர்களை கண்டுபிடித்து நிபந்தனையின்றி ஒப்படைப்பது முக்கியம், ஊழல் செய்பவர்களையும் அவர்களின் செயல்களையும் மறைக்கும் சர்வதேச விதிமுறைகள் மற்றும் அளவுக்கு மீறிய வங்கி ரகசியங்களை உடைத்தெரிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், அவரது சொல்லுக்கும் செயலுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அவர் இரட்டை நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கிறார். ஆதானி குழுமத்துக்கு அவர் வழங்கும் வெளிப்படையான பாதுகாப்பால் இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆதானி குழும மெகா ஊழல் தொடர்பாக கடந்த 2023 ஜனவரி–மார்ச் மாதங்களில் காங்கிரஸ், பிரதமரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

1. முக்கிய உட்கட்டமைப்பு துறைகளில் உள்ள நிறுவனங்களை விலகச் செய்வதற்காக ED, CBI மற்றும் வருமான வரித்துறை போன்ற அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம், பிரதமர் விரும்பும் நிறுவனங்களுக்கு நன்மைகள் ஏற்படுகின்றன.

2. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற முக்கிய துறைகளில் ஆதானி நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் பாகுபாடான தனியார்மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிமெண்டு, மின்சாரம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற பிற துறைகளுக்கும் இது விரிவடைய வழி வகுக்கப்பட்டுள்ளது.

3. வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் ஆதானிக்கு ஒப்பந்தங்கள் கிடைக்க, இந்திய தூதரகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

4. சாங் மற்றும் அஹ்லியுடன் தொடர்புடைய வர்த்தக நிறுவனங்கள் மூலம் 2021 முதல் 2023 வரை அதிக மதிப்பீட்டில் நிலக்கரி இறக்குமதி செய்து, ரூ.12,000 கோடி இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் குஜராத்தில் ஆதானி மின்நிலையங்களிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் விலை அதிகரித்தது.

5. இந்தியாவில் அதிக விலையில் சூரியசக்தி மின்சாரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கவுதம் அதானி மற்றும் அவரது ஏழு கூட்டாளிகள் ரூ.2,000 கோடி ($250 மில்லியன்) வரை லஞ்சம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தற்போது அமெரிக்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோடானி (மோடி-அதானி) மெகா ஊழலின் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு (JPC) அமைக்க வேண்டும் என இந்திய தேசிய காங்கிரஸ் (INC) தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரதமர் இதைத் தடுக்கிறார். அதுமட்டுமல்லாமல், பிரதமரின் முழு ஆதரவுடன் ஆதானி குழுமம் தொடர்ந்து ஒவ்வொரு வணிகத்திலும் தனது இருப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன் உண்மையான முக்கிய திறன் பிரதமரின் ஆதரவுதான் என்பதை இது வெளிப்படுத்துகிறது. உண்மையான தொழில் முனைவை, இந்திய தேசிய காங்கிரஸ் வரவேற்கிறது, ஆதரிக்கிறது, கொண்டாடுகிறது. ஆனால், அரசியல் உறவுகளின் நெருக்கத்தால் மற்றும் பரஸ்பர நன்மைகளால் வளர்க்கப்படும் வணிக விரிவாக்கத்திற்கும் அதற்கும் இடையே தெளிவான வேறுபாடுகள் உள்ளன’’ என தெரிவித்துள்ளார்.

‘அதானி குழுமத்தில் பினாமி நிதி’ - ஜேபிசி விசாரணையை பிரதமர் மோடி தடுப்பதாக காங். குற்றச்சாட்டு
டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் இருந்து வெளியேற கல்கோடியாஸ் பல்கலை.க்கு உத்தரவு - காரணம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in