

லக்னோ: உ.பி.யில் வங்க தேசத்தினரும் ரோஹிங்கியாக்களும் சட்டவிரோதமாக ஊடுருவி இருப்பதாகவும் அவர்கள் உள்ளூர் மக்களைப் போல ஆதார் எண், வாக்காளர் அட்டை உள்ளிட்ட இந்திய அடையாள ஆவணங்களைப் பெற முயற்சிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதைத் தடுப்பதற்கான முயற்சியில் காவல்துறையினரும் நிர்வாகத் துறையினரும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சந்தேக நபர்களைப் பிடித்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், உ.பி.முதல்வர் ஆதித்ய நாத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாநிலத்தின் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றுக்கு அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது.
இங்கு சட்ட விரோதமாக வசிக்கும் வங்கதேச, ரோஹிங்கியா ஊடுருவல்காரர்கள் மீது கடும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
எனவே, எந்த ஒரு தனி நபரையும் வீட்டு வேலைக்கோ அல்லது வணிக நடவடிக்கையிலோ பணி அமர்த்துவதற்கு முன்பு, அவர்களின் அடையாளத்தை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். மாநிலத்தின் பாதுகாப்பு என்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு ஆகும்" என கூறப்பட்டுள்ளது.