

பெங்களூரு: பெங்களூருவில் டே கேரில் 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வாஷிங் மெஷினில் அடைத்தும், ஜெட் வாட்டர் ஸ்பிரேவை வாயில் அடித்தும், கழிவறையில் அடைத்து வைத்தும் சித்ரவதை செய்த வீடியோ வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக 5 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், ஒருவரை கைது செய்துள்ளனர்.
நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகராக விளங்கும் பெங்களூருவில் டே கேர் (Day Care) என அழைக்கப்படும் மழலையர் காப்பகங்கள் ஆயிரக் கணக்கில் இயங்கி வருகின்றன. வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்களது குழந்தைகளை இத்தகைய டே கேர்களில் விட்டுவிட்டு வேலைக்கு செல்கின்றனர்.
இத்தகைய சூழலில் பிரான்ஸை தலையகமாக கொண்ட ‘கேப்ஜெமினி’ என்ற டே கேர் பெங்களூருவில் இயங்கி வருகிறது. இந்த டே கேரில் அடம்பிடித்து அழும் குழந்தைகளை சமாளிப்பதற்காக அதன் ஊழியர்கள் அடித்து சித்ரவதை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
அந்த வீடியோக்களில், அடம்பிடிக்கும் குழந்தைகளை ஓடாத வாஷிங் மெஷினில் உட்கார வைத்து பயமுறுத்தியும், கழிவறையில் பூட்டி வைத்தும், ஜெட் ஸ்ப்ரே மூலம் வாயில் நீரை பீய்ச்சி அடித்தும் சித்ரவதை செய்துள்ளனர். இந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதையடுத்து பெங்களூரு போலீஸார் கேப்ஜெமினி டே கேரில் பணியாற்றிய 5 பெண் ஊழியர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோவில் இடம்பெற்ற விஜயலட்சுமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.