‘‘திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணம்’’ - மோடிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்!

‘‘திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணம்’’ - மோடிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்!
Updated on
1 min read

திருவனந்தபுரம்: ‘‘பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இது மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணம். இந்த தருணத்தில், பிரதமர் மோடிக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், மூன்று அமிர்த பாரத் விரைவு ரயில்களை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தொழில்நுட்ப சேவைகள் நிறைந்த நவீன தலைமை தபால் நிலையத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பினராயி விஜயன், ‘‘'கடவுளின் சொந்த தேசமான' கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் கேரளாவுக்கு வருகை தந்திருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

இதில், சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி புத்தாக்க மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், பூஜாப்புரா தலைமை தபால் அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தல், ஒரு லட்சம் பயனாளிகளுக்குப் பயனளிக்கும் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தைத் தொடங்கி வைத்தல் ஆகியவை அடங்கும். இந்த விழாவில் பயனாளிகளுக்கு கடன் அட்டைகள் மற்றும் கடன் வழங்கும் காசோலைகளும் வழங்கப்படுகின்றன. மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயிலையும் பிரதமர் இங்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை இவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள்.

இந்தத் திட்டங்கள் பலவற்றிற்கு மத்திய அரசின் ஒப்புதலை நாங்கள் தொடர்ந்து கோரி வந்த நிலையில், இது மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணமாகும். இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இந்த அக்கறையும் நல்லெண்ணமும் வரும் காலங்களிலும் கேரளாவுக்குத் தொடர்ந்து காட்டப்படும் என்று நம்புகிறேன். பல்வேறு துறைகள் தொடர்பான கேரளாவின் நியாயமான கோரிக்கைகளும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்றும், அவை அனைத்தும் காலவரையறைக்குள் செயல்படுத்தப்படுவதை பிரதமர் உறுதி செய்வார் என்றும் நான் நம்புகிறேன்’’ என தெரிவித்தார்.

‘‘திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணம்’’ - மோடிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த பினராயி விஜயன்!
நடைபாதை வியாபாரிகளுக்கான கடன் அட்டை திட்டம்: திருவனந்தபுரத்தில் பிரதமர் மோடி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in