

உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்
புதுடெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாகரத்தினா உள்ளிட்டோர் அடங்கிய 9 நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது: இந்து மதம் பெண்களைச் சமத்துவமாக மட்டும் நடத்தவில்லை. ஆண்களுக்கு மேலான நிலையில் வைத்துள்ளது. மத வழக்கத்தின் நடைமுறையாக நாடு முழுவதும் ஆண்களுக்கும் பல்வேறு கோயில்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. புஷ்கரில் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மா கோயிலில் திருமணமான ஆண்களுக்குத் தடை உள்ளது.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் கூடுவது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. முக்கியத் திருநாளில் ஆண்களுக்குத் தடை உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோயில் ஆண் அர்ச்சகர்கள், 10 நாட்கள் விரதமிருக்கும் பெண் பக்தர்களின் பாதங்களைக் கழுவும் வழக்கம் உள்ளது. நாரி பூஜை நாளில் பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் மணமான ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.
பிஹார் மாநிலம் முசாஃபர்பூரிலுள்ள மாதா கோயில், கேரளாவின் கொட்டங்குளங்கரா கோயில் உட்பட பல கோயில்களில் இன்றும் கட்டுப்பாடுகள் உள்ளன. அசாம் மாநிலம் காமாக்யா கோயிலில் அம்புபாச்சி விழாவின்போது, பெண் அர்ச்சகர்கள் மட்டும் பூஜை செய்கின்றனர். ஆணாதிக்க, பாலின வேறுபாடுகள் போன்ற அம்சங்கள் நமது நாட்டில் இல்லை. இவ்வாறு துஷார் மேத்தா தெரிவித்தார்.