

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்படும் பவானிபூர் தொகுதியில் அவரை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் 50-க்கும் மேற்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2021 தேர்தலைப் போலவே, மம்தா பானர்ஜிக்கு நேரடி சவால் விடுக்கும் வகையில் சுவேந்து அதிகாரி களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை நந்திகிராம் தொகுதியில் மம்தாவைத் தோற்கடித்த சுவேந்து அதிகாரி, இந்த முறை அவரது சொந்தத் தொகுதியிலேயே அவரை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
சுவேந்து அதிகாரி தனது வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். பவானிபூர் தொகுதியில் இருவரும் போட்டியிடுவது மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது.
மேற்கு மிதினிபூர் மாவட்டத்தின் கரக்பூர் சதார் தொகுதியில் பாஜகவின் மூத்த தலைவர் திலீப் கோஷ் போட்டியிடுகிறார். அதே மாவட்டத்தில் உள்ள சல்போனி தொகுதியில் பீமன் மஹ்தோ வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். தெற்கு கொல்கத்தாவின் முக்கியத் தொகுதியான ராஸ்பெஹாரியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா களம் காண்கிறார்.
மிதினிபூர் மற்றும் ஹூக்ளி மாவட்டங்களிலும் வலுவான வேட்பாளர்களை பாஜக முன்னிறுத்தியுள்ளது. பூர்வா மிதினிபூர் மாவட்டத்தின் காந்தி உத்தர தொகுதியில் சுமிதா சின்ஹாவும், ஹூக்ளி மாவட்டத்தின் புர்சுரா தொகுதியில் பீமன் கோஷும் போட்டியிடுகின்றனர்.
தெற்கு 24 பரகானா மாவட்டத்தின் குல்தாலி தொகுதியில் மாதவி மஹல்தர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், வைரமண்ட் ஹார்பர் தொகுதியில் தீபக் குமார் ஹால்டரும், ஆசன்சோல் தெற்கு தொகுதியில் அக்னிமித்ரா பாலும் போட்டியிட உள்ளனர்.
ஆசன்சோல் வடக்கு தொகுதியில் கிருஷ்ணேந்து முகர்ஜி, காளிகஞ்ச் தொகுதியில் பாபன் கோஷ், ஹன்சன் தொகுதியில் நிகில் பானர்ஜி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். வட வங்காளத்தைப் பொறுத்தவரை, கூச்பெஹார் உத்தர தொகுதியில் சுகுமார் ராயும், சிலிகுரி தொகுதியில் சங்கர் கோஷும் போட்டியிடுகின்றனர்.