

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் கட்டாய மதமாற்ற தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர் பொறுப்பை வகிக்கும் துணை முதல்வர் விஜய் சர்மா பேரவையில் நேற்று சத்தீஸ்கர் தர்ம சுதந்திர விதேயக்(மத சுதந்திர மசோதா, 2026) என்ற மசோதாவை தாக்கல் செய்தார். கட்டாய மதமாற்றம், வற்புறுத்தி மதம் மாற்றுதல், ஆசை காட்டுதல், மோசடி அல்லது தவறான சித்தரிப்பு ஆகியவற்றின் மூலம் நடைபெறும் மத மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சரண் தாஸ் மகந்த் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த மசோதா முதலில் பேரவை தேர்வுக் குழுவினரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், இதைக் கண்டித்து அவையிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பும் செய்தனர்.
இதுகுறித்து சரண் தாஸ் மகந்த் கூறும்போது, “இதுபோன்ற மசோதாக்களை 11 மாநிலங்கள் உருவாக்கியுள்ளன. இவை அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளன. எனவே, இந்த மசோதாவை அவசர அவசரமாக அவையில் தாக்கல் செய்யக்கூடாது” என்றார். இதனிடையே இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது.