

பாட்னா: பிஹார் முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி சமீபத்தில் பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
தலைநகர் பாட்னாவில் கடந்த 1973-ம் ஆண்டு 153 ஏக்கரில் அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காவுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் பெயர் வைக்கப்பட்டது. இங்கு 110 இனங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. இதன் பெயரை மாற்றி, ‘பாட்னா உயிரியல் பூங்கா’ என பெயர் வைக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் பாட்னாவில் கடந்த 1980-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பால் தொழில்நுட்ப மையத்துக்கும் சஞ்சய் காந்தியின் பெயர் வைக்கப்பட்டிருந்தது. இங்கு பால் பண்ணை தொழில்நுட்பத்தில் பி.டெக் மற்றும் எம்.டெக். படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் பெயர் ‘பிஹார் மாநில பால் தொழில்நுட்ப மையம்’ என மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மொத்தம் 61 முடிவுகள் எடுக்கப்பட்டன.