

புதுடெல்லி: ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அமராவதிக்கான சட்ட அங்கீகாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, குடியரசுத் தலைவருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம், 2026'-க்குத் தனது ஒப்புதலை அளித்து, நமது தலைநகரம் குறித்த நீண்ட கால கனவை நனவாக்கிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு ஆந்திரப் பிரதேச மக்கள் சார்பாக எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது மாநிலத்தின் மீது கொண்டுள்ள அக்கறைக்காகவும், அளித்த வழிகாட்டுதலுக்காகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கும்; இச்சட்ட மசோதாவுக்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்; நமது மாநிலத் தலைவர்களுக்கும்; எங்களோடு துணை நின்ற ஒவ்வொரு குடிமகனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஆந்திரப் பிரதேச மக்களுக்கு, குறிப்பாக அமராவதி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்த நாள் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, 'ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு (திருத்தச்) சட்டம், 2026'-க்கு ஒப்புதல் அளித்ததன் மூலம், நமது தலைநகரம் குறித்த கனவு அதிகாரப்பூர்வமாக நனவாகியுள்ளது.
நமது மாநிலத்தின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்வதில் தனது தொலைநோக்குப் பார்வையையும் ஆதரவையும் வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு, கோடிக்கணக்கான தெலுங்கு மக்களுடன் இணைந்து நானும் எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் இச்சட்ட மசோதாவிற்கு ஆதரவளித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றித் தருணத்திற்கான பாதையைத் தங்கள் பொறுமை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் அமைத்துத் தந்த அமராவதி விவசாயிகளுக்கு ஒரு சிறப்பு வணக்கம்! நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதனைச் சாதித்துள்ளோம்!” என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரப் பிரதேசத்தின் ஒரே மற்றும் நிரந்தரத் தலைநகராக அமராவதியை அறிவிக்கும் மசோதா கடந்த ஒன்றாம் தேதி மக்களவையிலும், இரண்டாம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியதை அடுத்து அது நேற்று (ஏப்ரல் 6) அரசிதழில் வெளியிடப்பட்டது.