

அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதிக்கு அங்கீகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில தலைநகரான அமராவதிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதா தீர்மானத்திற்கு, கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திர பேரவையில் ஒருமனதாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, நேற்று இந்த தீர்மான மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் முன் மொழிந்தார்.
இதன் மீது, தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா, காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எம்பிக்கள் விவாதம் நடத்தினர். அதன் பின்னர், இந்த மசோதாவிற்கு மாநில சட்டப் பிரிவினை மசோதா சட்டத்தின் படி ஒப்புதல் வழங்குவதாக சபாநாயகர் இருக்கையில் இருந்த தென்னேட்டி கிருஷ்ண பிரசாத் அறிவித்தார்.
இந்த மசோதா இன்று வியாழக் கிழமை மாநிலங்களவைக்கு வர உள்ளது. இதை மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் இன்று முன்மொழிய உள்ளார். அதன் பின்னர் இதன் மீது மதியம் விவாதம் நடத்தப்பட்டு, அதன் பின்னர் மாநிலங்களவையில் ஒப்புதல் பெறப்படும்.