

பாட்னா: பிஹாரின் வைஷாலி மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் நான்கு வழி நெடுஞ்சாலைத் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லால் கஞ்ச் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நேற்று அங்கு வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது கட்டுமான பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த பீம் லாஞ்சர் எனப்படும் ராட்சத இயந்திரம் திடீரென சரிந்தது. அதன் அடியில் தொழிலாளர்கள் சிக்கினர்.
இதையடுத்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. காயம் அடைந்த 8 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.