Published : 23 May 2023 05:08 AM
Last Updated : 23 May 2023 05:08 AM

குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை எதிர்த்து அவதூறு வழக்கு - பிபிசிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் குஜராத் படுகொலை குறித்த ஆவணப்படத்தை வெளியிட்ட தாகக் கூறி தொடர்ந்த வழக்கில் பிபிசி செய்தி நிறுவனம் பதிலளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் மத வன்முறைகள் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அம்மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி.

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது முஸ்லிம்கள் தேடித் தேடி படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் அனைத்து வழக்குகளிலும் பிரதமர் மோடி மீது எந்தவித குற்றமும் இல்லை என விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் 2002-ம் ஆண்டு நடந்த முஸ்லிம் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் 2 ஆவணப்படங்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த ஆவணப்படங்கள், பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதாக இருந்ததால் மிகப்பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

பிபிசி ஆவணப்படத்தை எதிர்க்கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் வெளியிட்டனர். இதையடுத்து இந்த ஆவணப் படங்களை நாடு முழுவதும் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது. இது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, குஜராத்தைச் சேர்ந்த நீதிக்கான விசாரணை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், இந்தியாவுக்கும், அதன்நீதித்துறைக்கும், பிரதமர் மோடிக்கும் களங்கம் விளைவிக்கும் நோக்கில் பிபிசி ஆவணப்படம் தயாரித்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே கூறியதாவது: பிபிசி-தான் (இங்கிலாந்து) இந்த ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. பிபிசி (இந்தியா) அதன் இந்திய கிளை மட்டுமே. இந்த ஆவணப்படம் இந்தியாவின் நற்பெயருக்கு மட்டுமல்லாது, அதன் நீதித்துறை உள்பட ஒட்டுமொத்த அமைப்பின் நற்பெயருக்கும் களங்கம் விளைவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் குற்றச் சாட்டை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. இவ்வாறு வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி சச்சின்தத்தா கூறும்போது, ‘‘இந்த வழக்கில் அனுமதிக்கப்பட்ட அனைத்து வழிகள் மூலமாகவும் பிபிசி (இங்கிலாந்து), பிபிசி (இந்தியா) ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.

மேலும், வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x