Published : 15 Oct 2017 10:52 AM
Last Updated : 15 Oct 2017 10:52 AM

திருப்பதியில் இருந்து கடத்தப்பட்ட 7.1 டன் செம்மரங்கள் பெங்களூருவில் பறிமுதல்: 6 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்

திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியிலிருந்து வெட்டி கடத்தப்பட்டு, பெங்களூரூவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7.1 டன் செம்மரங்களை ஆந்திர போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

இது குறித்து திருப்பதி எஸ்.பி அபிஷேக் மொஹந்தி நேற்று கூறியதாவது:

திருப்பதியை அடுத்துள்ள காஜுல மான்யம் போலீஸார் கடந்த 11-ம் தேதி சித்தூர் மாவட்டம், நின்றா மண்டலம், கல்யாண கண்டிகை கிராமத்தை சேர்ந்த நரேஷ் குமார் (33) என்பவரை கைது செய்தனர். இவரிடமிருந்து 305 கிலோ செம்மரங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், நரேஷ் குமாரின் கூட்டாளிகளான பிரசாத், அபிஷேக் ஆகியோர் பெங்களூருவில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வெள்ளிக் கிழமை காஜுல மான்யம் போலீஸார் பெங்களூர் விரைந்து சென்று பொம்மசந்திரா பகுதியில் பிரசாத், அபிஷேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அப்போது இதே பகுதியில் சென்னையை சேர்ந்த சையது என்பவருக்கு சொந்தமான குடோனில் செம்மரங்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

குடோனில் போலீஸார் சோதனை செய்ததில் அங்கு 7.1 டன் எடை கொண்ட 235 உயர் ரக செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.8.5 கோடியாகும். அந்த குடோனுக்கு பாதுகாப்பாக இருந்த தர்மபுரியை சேர்ந்த விக்னேசன், பெரியசாமி, பால கிருஷ்ணா, சங்கர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு திருப்பதி எஸ்.பி. அபிஷேக் மொஹந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x