Published : 13 May 2023 06:11 AM
Last Updated : 13 May 2023 06:11 AM

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.

குஜராத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி நீதிபதிகள் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. குஜராத் உயர் நீதிமன்றம் நடத்திய இந்த எழுத்துத் தேர்வில் 175 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களின் பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.

எழுத்துத் தேர்வின் அடிப்படை யில் பதவி உயர்வு பெற்ற நீதிபதிகளின் பட்டியல் கடந்த மார்ச் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற 68 நீதிபதிகள் தொடர்பான அறிவிக்கை கடந்த மார்ச் 18-ம்தேதி வெளியிடப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவும் பதவி உயர்வு பெற்ற நீதிபதிகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

இதை எதிர்த்து குஜராத் நீதித் துறையை சேர்ந்த ரவிகுமார் மேத்தா, சச்சின் மேத்தா ஆகியோர் கடந்த மார்ச் 28-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், ‘‘நீதிபதிகள் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத் தேர்வில் நாங்கள் (ரவிகுமார் மேத்தா) 135.5 மதிப்பெண், (சச்சின் மேத்தா) 148.5 மதிப்பெண்களைப் பெற்றோம். ஆனால் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. எங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ரவிகுமார் அமர்வு விசாரித்தது. வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி மாநில அரசு, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, 68 நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு வழங்கி கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த 28-ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு குஜராத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

கடந்த 8-ம் தேதி இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் நீதிபதிகள் எம்.ஆர். ஷா, ரவிகுமார் அமர்வு நேற்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில், குஜராத் மாநிலநீதி சேவை விதிகளை மீறி நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே 68 நீதிபதிகளின்பதவி உயர்வுக்கு தடை விதிக்கிறோம். அவர்கள் பழைய பதவியில் பணியமர்த்தப்பட வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த மாஜிஸ்திரேட் ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மா உட்பட 68 நீதிபதிகளின் பதவி உயர்வுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x