Published : 31 Oct 2017 05:26 PM
Last Updated : 31 Oct 2017 05:26 PM
டெல்லியில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மிரட்டல் கடிதம் வைத்த மும்பை கோடீஸ்வரரை போலீஸார் கைது செய்துள்ளனர். காதலிக்காக அவர் மிரட்டல் விடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானம் நேற்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் உள்ள கழிவறையில் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விமானத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக அதில் எழுதப்பட்டு இருந்தது.
இதையடுத்து, விமானம் அவசர அவசரமாக, அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. பயணிகள் பரிசோதிக்கப்பட்டனர். அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரே அந்த மிரட்டல் கடிதத்தை எழுதியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபரை, விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் உடனடியாக சேர்த்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் அவர் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஜே.கே பாட் கூறுகையில், ''டெல்லி - மும்பை விமானத்திற்கு மிரட்டல் விடுத்த நபர் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2017 ஜூலையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் நபர் இவரே. அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். தேவைப்பட்டால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம்'' எனக்கூறினார்.
விமானக் கடத்தலை தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய சட்டத்தின்படி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க முடியும். அவரது சொத்துகள் முழுவதையும் பறிமுதல் செய்ய முடியும்.
இதனிடையே கைது செய்யப்பட்ட நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த கோடீஸ்வரரான அவர் அங்கு தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தில் அவரது காதலி பணியாற்றி வருகிறார். வேலையை விட்டு விட்டு தன்னுடன் மும்பையில் வந்து தங்குமாறு காதலியை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரது காதலி அதற்கு உடன்படாததால் ஜெட் ஏர்வேஸ் விமான கழிவறையில் மிரட்டல் கடிதத்தை வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT